அபு தாபி விமானத்தில் வந்த இந்தியர் மாயம்?
அபு தாபியில் தங்கி பணியாற்றி வந்த இந்தியாவைச் சேர்ந்த 30 வயது இளைஞர், விமானத்தில் வந்த போது காணாமல் போனதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புது தில்லி: அபு தாபியில் தங்கி பணியாற்றி வந்த இந்தியாவைச் சேர்ந்த 30 வயது இளைஞர், விமானத்தில் வந்த போது காணாமல் போனதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஞ்சன் ஸ்வைன் என்ற இளைஞர் ஒடிசாவைச் சேர்ந்தவர் என்பதும், அபுதாபியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என்றும் கூறப்படுகிறது.
அபு தாபி சென்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக அவர் இந்தியா திரும்பும் போது காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் அவர் இந்தியா வரும் விமானத்தில் ஏறியதாகவும், அதன் பிறகு அவர் காணாமல் போனதாகவும் கூறப்படும் நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தில்லி காவல்துறையினர் அவரைத் தேடி வருகிறார்கள்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி அவர் இந்தியா திரும்பியிருக்க வேண்டும். தனது டிக்கெட் குறித்தும் ரஞ்சன் தனது சகோதரியிடம் தெரிவித்திருக்கிறார். பிறகு அவரிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை. அவருடன் பணியாற்றிய நண்பர் ஃபஹீம் அகமதுவுடன் அவர் இந்தியா புறப்பட்டுவிட்டதாக நிறுவனத்திலிருந்து எங்களுக்கு பதில் வந்தது.
இது தொடர்பாக விசாரணை செய்ததில், அவர் அபுதாபியிலிருந்து புறப்பட்டுவிட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது என்று குடும்பத்தினர் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அவரது குடும்பத்தினருக்கு சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணம் கேட்டதாகவும், இல்லையென்றால் மகனைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, தில்லி திரும்பிய நிலையில், அவரை யாரேனும் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.