உச்சநீதிமன்றம் முன்பு நிச்சயதார்த்தம்! தன்பால் ஈர்ப்பு வழக்குரைஞர்கள் அதிரடி!!
ஒரே பாலினத்தவா்களின் திருமணங்களை சிறப்புத் திருமணச் சட்டப்படி அங்கீகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், வழக்குரைஞர் உத்கர்ஷ் சக்சேனா மனுவும் ஒன்று
உச்சநீதிமன்றம் முன்பு தன்பால் ஈா்ப்பு வழக்குரைஞர்கள் இருவர் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தன்பால் ஈர்ப்பாலர்கள் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்றும், அதனை அங்கீகரிக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கே உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற வழக்குரைஞர்களான அனன்யா கோடியா உத்கர்ஷ் சக்சேனா ஆகியோர் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் தன்பால் ஈர்ப்பாளர்கள். உச்சநீதிமன்றம் முன்பு இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இது தொடர்பான படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
அனன்யா கோடியா வெளியிட்டுள்ள பதிவில், நேற்று வருத்தத்திற்குள்ளானோம். இன்று உத்கர்ஷ் சக்சேனாவும் நானும் நீதிமன்றம் சென்றோம். எங்கள் உரிமை மறுக்கப்பட்ட இடத்தில், நாங்கள் மோதிரம் மாற்றிக்கொண்டோம். அதனால், இந்த வாரம் சட்ட இழப்பு மட்டுமில்லாமல், எங்கள் நிச்சயதார்த்தம் நடந்த வாரம். நாங்கள் மீண்டும் போராடுவோம் எனப் பதிவிட்டுள்ளார்.
ஒரே பாலினத்தவா்களின் திருமணங்களை சிறப்புத் திருமணச் சட்டப்படி அங்கீகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், வழக்குரைஞர் உத்கர்ஷ் சக்சேனா மனுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.