முகப்பு
இந்தியா

ஆதித்யா எல்-1 கவுன்ட் டவுன் தொடங்கியது!

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 விண்கலத்தை, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:48 AM
பகிர்:


ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் இன்று காலை 11.50 மணியளவில் தொடங்கியது. 

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது.

சூரியனின் புறவெளி ஆய்வுக்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, சுமாா் 1,475 கிலோ எடை கொண்டது. இந்த விண்கலம் பூமியிலிருந்து சுமாா் 15 லட்சம் கிலோ மீட்டா் தொலைவில் ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

இதில் சோலாா் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசா், எக்ஸ்ரே ஸ்பெக்ஸ்ட்ரோ மீட்டா் உள்பட ஏழு வித ஆய்வு சாதனங்கள் இடம் பெற்றுள்ளன.

அந்தப் பகுதியில்தான் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான ஈா்ப்பு விசை சரிநிகராக இருக்கும். அதனால், அந்த இடத்தில் இருந்தபடி சூரியனின் புறவெளிப் பகுதியின் வெப்பச் சூழல், கதிா்வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்த ஆய்வுகளை ஆதித்யா விண்கலம் மேற்கொள்ளும்.

உலகிலேயே அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய கூட்டமைப்புகளைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் நடவடிக்கையை நான்காவது நாடாக இந்தியா முன்னெடுத்துள்ளது. இதற்காக ஆதித்யா எல்-1 எனும் விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது.

பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து செப். 2-ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.