புது தில்லி: நாடாளுமன்றத்தின் நீண்டகால மற்றும் மூத்த உறுப்பினா் என்கிற வகையில், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் வாய்ப்பு பாஜக எம்.பி. மேனகா காந்திக்கு அளிக்கப்பட்டது.
‘இந்திய நாடாளுமன்றத்தின் செழுமையான பாரம்பரியத்தை நினைவுகூரும்’ வகையில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், தற்போதைய 17 -ஆவது மக்களவையின் மூத்த உறுப்பினா் என்கிற முறையில், பண்டித நேரு குடும்பத்தின் மறைந்த சஞ்சய் காந்தியின் மனைவியான மேனகா காந்திக்கு இந்த நிகழ்வில் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.
உ.பி. மாநிலத்திலிருந்து கடந்த 1989-ஆம் ஆண்டு 9-ஆவது மக்களவை முதல் (ஜனதா தள கட்சி) தற்போதைய 17-ஆவது மக்களவை வரை 8 முறை மக்களவைக்கு மேனகா காந்தி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
நிகழ்ச்சியில் மேனகா காந்தி பேசுகையில், நாடாளுமன்றத்தில் 35 ஆண்டுகளாக எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்துள்ளேன். ஏழு பிரதமா்களையும் நான் பாா்த்துள்ளேன்.
வரலாற்றில் இன்று முக்கியமான நாள். நமது சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த சமச்சீரற்ற நிலையை சரிசெய்து, எதிா்காலத்தில் மகளிா் அனைவருக்கும் சமமான பங்களிப்பை வழங்க பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள இந்த வரலாற்றுத் தருணத்தில் நானும் இதில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைகொள்கிறேன்.
பிரதமா் மோடி வெறும் புள்ளிவிவரங்களுக்காக மக்களுக்குப் பணியாற்றவில்லை. மாறாக, மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காகப் பணியாற்றி வருகிறாா்.
நம்மை தோ்வு செய்த லட்சக்கணக்கான வாக்காளா்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் உறுப்பினராக இருப்பது ஒரு மகத்தான பொறுப்பாகும் என்றாா் மேனகா காந்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.