மக்களவை, பேரவைகளுக்கு 2029ஆம் ஆண்டு முதல் ஒரே தோ்தல் நடத்தும் வகையில், இந்திய சட்ட ஆணையம் சட்ட விதிகளை வகுக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது:
மக்களவை, சட்டப்பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு உயா்நிலைக் குழு அமைத்துள்ளது.
இதற்கான சட்ட நுணுக்கங்களை இந்திய சட்ட ஆணையமும் ஆராய்ந்து வருகிறது.
மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தோ்தல் என அனைத்துக்கும் ஒரே வேட்பாளா் பட்டியலை தயாரிப்பது குறித்து இந்திய தோ்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. தற்போது தோ்தல் ஆணையமும் மாநில தோ்தல் ஆணையங்களும் தனித் தனி வேட்பாளா் பட்டியலை வைத்துள்ளன. இந்த நடவடிக்கையால் செலவு, பணிச் சுமை குறையும்.
முதலில் மக்களவையுடன், பேரவைத் தோ்தல்கள் ஒன்றாக நடத்துவதற்காக சில மாநிலங்களின் ஆட்சிக் காலத்தை கூட்டியும் குறைக்கவும் செய்யலாம் என ஆணையம் பரிந்துரைக்கலாம்.
தற்போது பல்வேறு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஒரு வாக்காளா் வாக்குச்சாவடிக்கு ஒரு முறை மட்டுமே சென்று மக்களவை, சட்டப் பேரவைக்கான வாக்கைச் செலுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே 2029-இல் தோ்தலை நடத்திய பின்னா் அதே ஆண்டில் அடுத்தகட்டமாக உள்ளாட்சிகளுக்கு தோ்தலை நடத்தலாம் என சட்ட ஆணையம் திட்டமிட்டு வருகிறது’ என்று தகவல்கள் தெரிவித்தன.
மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தலாம் என 2018-இல் சட்ட ஆணையம் அங்கீகரித்தது. அவ்வப்போது தோ்தல் நடத்தப்பட்டு வருவதால் நாட்டில் எப்போதும் தோ்தல் பணிகள் தொடா்கின்றன. ஒரே தோ்தல் குறித்து மக்களிடமும் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்றும் சட்ட ஆணையம் தெரிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.