மனைவியின் தலையை வெட்டிக்கொன்ற கணவர் உள்பட நால்வர் கைது!
உத்தரப் பிரதேசத்தில் தலையில்லா பெண்ணின் உடல், கைவிரல்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை போலீஸார் கைபற்றியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் தலையில்லா பெண்ணின் உடல், கைவிரல்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை போலீஸார் கண்டெடுக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பண்டா மாவட்டத்தில் 35-40 வயதுள்ள பெண்ணின் தலை வெட்டப்பட்ட நிலையிலும், அவரது தலை சற்று தொலைவில் துணியால் சுற்றப்பட்டும், பற்கள் நசுக்கப்பட்டும் கிடந்ததையடுத்து, போலீஸார் சடலத்தை கைபற்றி விசாரணை நடத்தத் தொடங்கினர்.
இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அங்கூர் அகர்வால் கூறியது,
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பஹ்ரா கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் அஹிர்வார் என்பவர், தனது மனைவி ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக சந்தேகம் அடைந்து கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.
விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ராம்குமார் அவரது மகன்கள் சூரஜ் பிரகாஷ், பிரிஜேஷ், மருமகன் உதய்பன் ஆகியோர் பெண்ணைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக போலீஸாரிடம் தெரிவித்தனர். மாயா தேவி தனது இரண்டாவது மனைவி என்றும், தனது மகன்களில் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக ராம்குமார் குற்றம் சாட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்து மனைவியைக் கொல்ல திட்டமிட்டோம், அதன்படி, மகன்கள், மருமகனுடன் இணைந்து மாயா தேவியை சம்ரஹா கிராமத்திற்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது தலை மற்றும் கை விரல்களைக் கோடாரியால் வெட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பெண்ணின் கணவர் உள்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.