லக்னௌ: மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 19 முதல் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், நாடு முழுவதும் ஹெலிகாப்டர் சேவைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட கிட்டத்தட்ட 65 நாள்கள் இருக்கும் நிலையில், பல்வேறு தேசிய கட்சிகளும் தங்களது தலைவர்களின் பயணத்துக்காக ஹெலிகாப்டர்களை முன்பதிவு செய்து வருகின்றன.
கடந்த மக்களவைத் தேர்தலில், பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது தலைவர்களின் வான்வழிப் பயணத்துக்காக மட்டும் ரூ.400 கோடியை செலவிட்டிருந்தன.
ஆனால், இந்த ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே, ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களின் முன்பதிவு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டதாம்.
வெகு தொலைவிலிருக்கும் மாநிலங்களுக்கும், ஒரே நாளில் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியபோதிலும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சார்ட்டர்ட் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள், ஒரு சில மணி நேரங்களுக்கு என்ற அடிப்படையில்தான் முன்பதிவு செய்யப்படுகின்றன. ஒரு மணி நேரத்துக்கு ரூ.4.5 லட்சம் முதல் ரு.5.3 லட்சம் என விமானத்தின் வகைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறதாம். அதிக தேவை இருக்கும்போது, ஹெலிகாப்டர்கள் ஒரு மணி நேரத்துக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.
உத்தரப்பிரதேசத்தில், பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது தலைவர்களின் பயணத்துக்கு ஹெலிகாப்டர்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன.