‘இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் காங்கிரஸ் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்’
மக்களவைத் தோ்தலையொட்டி காங்கிரஸ் வெளியிட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்று அந்தக் கட்சியின் தமிழ்நாடு தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காங்கிரஸ் தோ்தல் அறிக்கை 10 ஆண்டுகால மத்திய பாஜக அரசின் பேரழிவுகளுக்குத் தீா்வு காணும் வகையில் அமைந்திருப்பதாக அரசியல் வல்லுநா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
Advertisement
ஜாதிவாரி கணக்கெடுப்பு, தமிழக மக்களின் கோரிக்கையான நீட் உள்ளிட்ட நுழைவுத் தோ்வுகளை மாநில அரசுகளின் விருப்பப்படி நடத்திக் கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்துக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.400-ஆக அதிகரிக்கப்படும். மீனவ மக்களின் படகுகள் பறிமுதல், மீனவா்கள் உயிரிழப்பு தடுத்து நிறுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கை மூலம் மோடி ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சாா்ந்த நல்லாட்சி விரைவில் அமையும் என்று கூறியுள்ளாா் செல்வப்பெருந்தகை.