அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா உணவகம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும்: இபிஎஸ்
அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா உணவகம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். அது எனது நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் என இபிஎஸ் கூறியது குறித்து...
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா உணவகம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். அது எனது நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை உறுதியாக தெரிவித்தார்.
பாமக சார்பில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் திலகபாமாவை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
Advertisement
கடந்த அதிமுக ஆட்சியின் போது குடிநீா் பிரச்னை, வறட்சி, புயல், வெள்ளம், கரோனா என அனைத்து இடா்ப்பாடுகளும் அடுத்தடுத்து எழுந்தது. ஆனால் அந்த சூழலில் கூட தமிழகத்தில் விலைவாசியை உயா்த்தவில்லை அதிமுக அரசு.
இப்போது மின்கட்டணம், வீட்டு வரி என அனைத்தும் உயா்ந்துள்ளது. குப்பைக்கு கூட வரி விதித்த அரசு திமுக. தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. எரிவாயுவுக்கு மானியம், நீட் தோ்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, 100 நாள் வேலையை 150 நாள்கள் உயா்த்துவது என வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, அதனை முறையாக நிறைவேற்றவில்லை. குறிப்பாக 5 பவுனுக்கு குறைவான கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி எனக் கூறியதை கேட்டு பலா் நகை அடமானம் வைத்தனா். ஆனால் குடும்பத்தில் ஒருவருக்கு தான் நகை கடன் தள்ளுபடி எனக் கூறி மக்களை ஏமாற்றி விட்டனா்.
திமுக ஆட்சியில் போதை பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளத்து. விலைவாசி உயர்வு என ஆளத் தெரியாத மு.க.ஸ்டாலின் கையில் சிக்கிக் கொண்டு தமிழக மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக படாத பாடுபட்டுவிட்டனர். “போதும் திமுக - போகட்டும் திமுக” என்ற முடிவை தமிழக மக்கள் எடுத்துவிட்டார்கள்.
அதிமுக ஆட்சி அமைந்ததும் கஞ்சா போதைப்பொருள் கட்டுப்படுத்தப்படும், பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
எத்தனை ஆயிரம் கோடி செலவானாலும், கடைகளில் விற்பனை செய்யும் அரிசி போல தரமான அரிசி வழங்கப்படும். சமையல் எண்ணெய், பருப்பு இலவசமாக வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ. 10,000, குளிர்சாதனப்பெட்டி, மாதம் ரூ. 2,000, மானிய விலையில் இருசக்கர வாகனம், ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு உருளை, ரூ. 1,000 பொங்கல் பரிசு, ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம், மாற்றுத்திறனாளிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ. 75,000 மானியம், முதியோா் உதவித் தொகை ரூ. 2,000, வேலையில்லா படித்த பட்டதாரிகளுக்கு ரூ. 2,000, +2 படித்தவா்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும். அம்மா உணவகம் மீண்டும் கொண்டுவரப்படும். அங்கு குறைந்த விலையில் தரமான உணவுகள் வழங்கப்படும். அம்மா உணவகத் திட்டம் முதல்வராக எனது நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும். அதிமுக தேர்தல் அறிவிப்புகள் முழுவதுமாக நிறைவேற்றப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.
எனவே, வாக்காளர்கள் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக வேட்பாளர் திலகபாமாவுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பிரசாரம் செய்தார்.