காஷ்மீா்: எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கோட்டுப் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எல்லை கோட்டுப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் ஆள்கள் நடமாட்டம் இருப்பதை கண்டறிந்தனா். பாதுகாப்புப் படையினா் எச்சரிக்கை விடுத்தபோது, அவா்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா்.
Advertisement
பின்னா், அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது குண்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்த பயங்கரவாதி ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
உடல் மீட்கப்பட்ட இடத்திலிருந்து 2 ஏ.கே. ரக துப்பாக்கிகள், 3 தோட்டா தொகுப்புகள், 4 கையெறி குண்டுகள், ரூ. 10,250 மதிப்பில் இந்திய பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினா் வெற்றிகரமாக தடுத்துள்ளனா் என்றனா்.