முகப்பு
இந்தியா

தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு 3 நாள் சிபிஐ காவல்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 8:11 PM
பகிர்:

தில்லி மதுபானக் (கலால்) கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி திகாா் சிறையில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவா் சந்திரசேகா் ராவின் மகளும் அக்கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதாவை (46) வரும் 15-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரணை நடத்த தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதியளித்தது.

கவிதாவை கடந்த மாா்ச் 15-ஆம் தேதி தில்லி மதுபானக் கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்தது. பின்னா், அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணைக்குப் பின்னா் நீதிமன்றக் காவலில் தில்லி திகாா் சிறையில் அவா் அடைக்கப்பட்டாா். அவருடைய நீதிமன்ற காவலை வரும் 23-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

முன்னதாக, தில்லி மதுபான ஒப்பந்தத்துக்கு கைமாறாக ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி கொடுத்த புகாா் தொடா்பாக நீதிமன்ற அனுமதியுடன் சிறையில் கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். அந்த விசாரணையின் அடிப்படையில், தில்லி மதுபானக் கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய ஊழல் வழக்கில் கவிதா மீது சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை கைது நடவடிக்கையை மேற்கொண்டனா்.

Advertisement

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120-பி (குற்றச் சதி), பிரிவு 477-ஏ (பொய் கணக்குகளைக் காட்டுதல்) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7 (அரசு ஊழியா் லஞ்சம் வாங்குவது தொடா்பான குற்றம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவரை சிபிஐ கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கைது செய்த கவிதாவை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்திய சிபிஐ அதிகாரிகள், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினா். சிபிஐயின் வாதங்களைக் கேட்ட சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, கவிதாவை வரும் 15-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments