புது தில்லி, ஏப்.16: "என் பெயர் அரவிந்த் கேஜரிவால், நான் பயங்கரவாதி அல்ல' என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திகார் சிறையில் இருந்து செய்தி அனுப்பியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் சிங்
செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாட்டிற்கும், தில்லி மக்களுக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு சகோதரனைப் போல் உழைத்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், திகார் சிறையில் இருந்து ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அதில், "என் பெயர் அரவிந்த் கேஜரிவால், நான் பயங்கரவாதி அல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.
பழிவாங்கும் எண்ணம்: பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய பாஜக அரசும் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சிறையில் பயங்கரவாதியாகவே நடத்துகிறார்கள். கேஜரிவால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை நேருக்கு நேர் சந்திக்க முடியாத அளவிற்கு பிரதமர் மோடி வெறுப்புடன் முன்னேறிவிட்டார். அரவிந்த் கேஜரிவாலைப் பழிவாங்கும் எண்ணம், வெறுப்பு ஆகியவை பிரதமர் மோடியின் மனம் முழுவதும் நிரம்பியுள்ளது.
முழு பலத்துடன் போராடுவார்: முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பில் வைத்து, துன்புறுத்த திட்டமிட்டுள்ளார்கள். அவரது மனபலத்தை உடைக்க நீங்கள் முயற்சி செய்தால், கேஜரிவால் முழு பலத்துடன் உங்களுக்கு எதிராகப் போராடுவார். முதல்வர் கேஜரிவாலை எப்படி சந்திக்க வைத்தார்கள் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மிகுந்த உணர்ச்சியுடன் கூறினார். இது வேதனைக்குரிய விஷயம்.
இந்த நாட்டு மக்களுக்கு பாஜகவைப் பற்றி நல்ல அபிப்ராயம் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் நினைக்க வேண்டாம். சர்வாதிகார செயல்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எப்போதும் தலைவணங்க மாட்டார்.
முதல்வர் கேஜரிவால் போராடினார், போராடுவார், தில்லி மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவார் என்றார் சஞ்சய் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.