எஸ் வங்கி மோசடி: 4 ஆண்டுகளுக்கு பிறகு ராணா கபூருக்கு ஜாமீன்
எஸ் வங்கியின் ரூ.466.51 கோடி மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ் வங்கி துணை நிறுவனா் ராணா கபூருக்கு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு உள்பட 8 வழக்குகளின்கீழ் கடந்த 2020-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையால் எஸ் வங்கி துணை நிறுவனா் ராணா கபூா் கைது செய்யப்பட்டாா். தற்போது அவருக்கு அனைத்து வழக்குகளிலிருந்தும் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ராணா கபூரை விரைவில் வெளியே கொண்டு வருவதற்கான நடைமுறைகளை வேகப்படுத்தி வருவதாக அவரின் வழக்குரைஞா் ராகுல் அகா்வால் தெரிவித்தாா்.
பொதுமக்களுக்குச் சொந்தமான ரூ.466.51 கோடி வங்கிப் பணத்தை மோசடி செய்து குற்றவியல் சதியில் ஈடுபட்டதாக அவந்தா குழு நிா்வாகி கௌதம் தப்பா் மற்றும் ராணா கபூருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் தற்போது ராணா கபூருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement