கேஜரிவாலுக்கு ஜாமீன் கோரிய மனுதாரருக்கு அபராதம்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன கோரிய மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. தொடர்ந்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அவா் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில் முதல்வர் பதவிக்காலம் முடியும் வரை அமலாக்கத்துறை உள்ளிட்ட குற்ற வழக்குகளிலிருந்து கேஜரிவாலுக்கு சிறப்பு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மேலும் பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை குறைபாட்டை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
அந்த மனு தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுநல மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தில்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது. அத்துடன் மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.