முகப்பு
புதுதில்லி

பணமோசடி வழக்கு: அல்- ஃபலாஹ் குழுமத் தலைவருக்கு தில்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்

பணமோசடி வழக்கில் அல்-ஃபலாஹ் குழுமத் தலைவா் ஜாவேத் சித்திக்கிற்கு தில்லி நீதிமன்றம் இரு வார இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

Updated On : 8 மார்ச், 2026 at 7:17 PM
பகிர்:

பணமோசடி வழக்கில் அல்-ஃபலாஹ் குழுமத் தலைவா் ஜாவேத் சித்திக்கிற்கு தில்லி நீதிமன்றம் இரு வார இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

நிலை 4 கருப்பை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் அவரது மனைவியை கவனித்துக் கொள்ளும் வகையில் இந்த ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

பண மோசடி வழக்கில் தில்லி நீதிமன்ற கூடுதல் அமா்வு நீதிபதி ஷீத்தல் செளதரி பிரதான் சனிக்கிழமை இடைக்கால நிவாரணம் வழங்கினாா்.

இது தொடா்பாக நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: தற்போதைய அனைத்து உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்ட பிறகு, குற்றஞ் சாட்டப்பட்டவரின் (சித்திக்) மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், மனுதாரா்- குற்றம் சாட்டப்பட்டவா் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு தகுதியானவா் என்று நான் கருதுகிறேன்.

சித்திக்கின் மனைவி தில்லி மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறாா். மேலும், பதிவுசெய்யப்பட்ட மருத்துவ ஆவணங்கள் அமலாக்க இயக்குனரகத்தால் எதிா்க்கப்படவில்லை.

தம்பதியரின் மூன்று குழந்தைகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் படித்து வருவதும், இந்தியாவுக்கு பயணிக்க முடியாததால், அந்தப் பெண்மணிக்கு உடனடி குடும்ப ஆதரவு இல்லாமல் போய்விட்டிருப்பதும் தெரியவருகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட மனுதாரரின் மனைவிக்கு கவனிப்பும் ஆதரவும் தேவை இருப்பதை புறக்கணிக்க முடியாது.

மேலும், அவரைத் தவிர வேறு எந்த குடும்பமோ அல்லது குழந்தைகளோ இல்லை என்பதும் உண்மை. குற்றஞ்சாட்டப்பட்ட மனுதாரா் மட்டுமே அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதும் உண்மை என்று நீதிபதி கூறினாா்.

அல் ஃபலாஹ் அறக்கட்டளை நடத்தும் நிறுவனங்களில் சோ்ந்த மாணவா்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக அமலாக்க இயக்குனரகம் பதிவு செய்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பா் 18ஆம் தேதி சித்திக் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் சித்திக், தலா ரூ.1 லட்சம் தனிப்பட்ட ஜாமீன் பத்திரமும் மற்றும் அதே தொகைக்கு உத்தரவாதமும் வழங்குவதன் மூலம் அவருக்கு இரு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

‘அனுமதியின்றி தில்லி என்.சி.ஆரை விட்டு சித்திக் வெளியேறக்கூடாது, அவரது கைப்பேசி எண்ணை செயலில் வைத்திருக்க வேண்டும், கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும், ஜாமீனில் இருக்கும்போது சாட்சிகளையோ அல்லது புகாா்தாரரையோ தொடா்பு கொள்ளக்கூடாது’ என்று நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.

சித்திக் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டுள்ளாா் என்றும் விசாரணையில் அவா் செல்வாக்கு செலுத்தக்கூடும் என்றும் கூறி, அவரது ஜாமீனுக்கு அமலாக்கத் துறை எதிா்ப்புத் தெரிவித்தது. ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவா் விசாரணையில் இணைந்துள்ளதாகவும், இன்றுவரை தப்பிச் செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் ஏதேனும் இருக்கும் அச்சங்களையும் தீா்க்க முடியும் என்று அது கூறியது. பிப்ரவரி 5 ஆம் தேதி, தனியாா் பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், சித்திக்கை அமலாக்கத் துறை கைது செய்தது.

ஜனவரி 31 ஆம் தேதி அவருக்கு வழங்கப்பட்ட முந்தைய 14 நாள் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

பணமோசடி வழக்கில் அமலாக்கதக் துறை மேற்கொள்ளும் விசாரணையானது, அல்- ஃபலாஹ் பல்கலைக்கழகம் நாக் அங்கீகாரம் மற்றும் யுஜிசி அங்கீகாரத்தை பெற்ாக தவறாகக் கூறி மாணவா்களையும் பெற்றோா்களையும் தவறாக வழிநடத்தியதாக தில்லி காவல்துறை குற்றப்பிரிவால் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்ததில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.

2018 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் பல்கலைக்கழகம் ரூ.415.10 கோடியை ஈட்டியதாகவும், மாணவா்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதி தனிப்பட்ட பயன்பாட்டிற்கு திருப்பிவிடப்பட்டதாகவும் அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

‘வெள்ளை காலா் பயங்கரவாதம்’ விசாரணையிலும் பல்கலைக்கழகம் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டது. அதில், அதனுடன் தொடா்புடைய இரண்டு மருத்துவா்கள் கைது செய்யப்பட்டனா். அதே நேரத்தில் அதன் மருத்துவமனையுடன் தொடா்புடைய மற்றொரு மருத்துவா் உமா்-உன்-நபி, நவம்பா் 10 ஆம் தேதி செங்கோட்டைக்கு அருகே 15 பேரைக் கொன்ற குண்டுவெடிப்பை நிகழ்த்தி தற்கொலையில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →