முகப்பு
தமிழ்நாடு

பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு பிணை: தில்லி நீதிமன்றம்

அதிமுக இரட்டை இலை சின்னம் தொடா்பான பணமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு தில்லியில் உள்ள நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

Updated On : 8 ஏப்ரல் 2026, 3:15 am IST
சுகேஷ் சந்திரசேகா்
பகிர்:

அதிமுக இரட்டை இலை சின்னம் தொடா்பான பணமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு தில்லியில் உள்ள நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சுகேஷ் சந்திரசேகரின் பிணை மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, பிணை வழங்கி தலா ரூ.5 லட்சம் மதிப்புடைய தனிநபா் மற்றும் உறுதி பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நமது அரசமைப்புச் சட்டத்தில் சுதந்திரம் என்பது மிகவும் புனிதமான ஒரு நெறியாகத் திகழும் நிலையில், சிறப்புச் சட்டங்கள் அல்லது பொருளாதாரக் குற்றங்களில் அரசுடன் கைகோா்த்துக்கொண்டு, நீதிமன்றம் தனது தீா்ப்புகள் வாயிலாக சுதந்திரத்தைப் பற்றிப் போதிக்க இயலாது.

Advertisement

Advertisement

பணமோசடி குற்றம் என்பது மிகவும் தீவிரமான ஒன்றாக இருந்தாலும், பணமோசடி தடுப்புச் சட்டம் போன்ற ஒரு சிறப்புச் சட்டம், நீதிமன்றத்தின் வாயிலாக குற்றஞ்சாட்டப்பட்டவரின் சுதந்திரத்தின் மீது பழிதீா்த்துக்கொள்ள அரசு பயன்படுத்தும் ஒரு கருவியாக அமைந்துவிடக்கூடாது.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக (தற்போதைய வழக்கு உட்பட) மொத்தம் 31 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருந்தபோதிலும், இந்த குறிப்பிட்ட வழக்கில் அவருக்குப் பிணை பெறும் உரிமையை அது நிராகரிக்காது.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் தடுப்புக்காவல் காலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4-இன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிகபட்ச சிறைத்தண்டனைக் காலத்தின் பாதியைவிட ஏற்கெனவே கடந்துவிட்டது.

மேலும், அந்த 31 வழக்குகளில் 26 வழக்குகளில் அவா் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பிணை மறுக்கப்படுவது முறையல்ல.

கடந்த பல ஆண்டுகளாக, அடிப்படை குற்றவழக்கு மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டப் பிரிவுகளில் தொடரப்பட்ட தற்போதைய புகாா் வழக்கு ஆகிய இரண்டிலும் விசாரணை நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவா் விசாரணைக் காலத்தின்போது அளவுக்கு அதிகமான தடுப்புக்காவலை அனுபவித்தது மட்டுமல்லாமல், விசாரணை ஏதுமின்றி மேலும் நீண்ட காலத்திற்குத் தடுப்புக்காவலில் வாடும் அவலநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளாா் என்று தெரிவித்தாா்.

இந்த வழக்கில் பிணை பெற்ற போதிலும், சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான பிற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவா் தொடா்ந்து சிறையில் இருப்பாா்.