தனது ஆட்சியில் யோகி ஆதித்யநாத் போன்ற முதல்வரால் தனக்கு பெருமை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார்.
அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் எப்போதும் திருப்திப்படுத்தும் அரசியலையே நம்பியிருக்கின்றன. முஸ்லீம் சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக காங்கிரஸ் கட்சி எதையும் செய்யவில்லை.
முத்தலாக் தடை சட்டத்தை ரத்து செய்ததன் மூலம் இங்குள்ள பல பெண்களின் வாழ்வு காக்கப்பட்டுள்ளது. அதனால் பல பெண்கள், சகோதரர்கள், தந்தையர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நலனுக்காக அச்சட்டத்தை ரத்து செய்தது பாஜக.
வசதி படைத்தவர்கள் மட்டுமே ஹஜ் புனித யாத்திரைக்கு செல்ல முடிந்தது. அதனால் இந்தியாவிலுள்ள முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்காக ஹஜ் யாத்திரை பயணிகளுக்காக ஒதுக்கீட்டை அதிகரிக்க செளதி அரேபிய மன்னரிடம் கோரிக்கை வைத்தேன். தற்போது ஹஜ் பயணிகளுக்காக ஒதுக்கீடு மட்டுமின்றி அங்கு செல்வதற்காக விசா பெறுவதற்கான விதிமுறைகளும் எளிமையாக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் ஹஜ் பயணம் செய்யவும் பாஜக ஊக்குவிக்கிறது. பல சகோதரிகளின் கனவை நனவாக்கியதன் மூலம் நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.
அனைத்து வகையான தொழில்களையும் வலுப்படுத்தும் நோகத்தில் பாஜக அரசு செயல்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சியை மேம்படுத்த ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் போல ஒரு முதல்வர் எனது ஆட்சியில் இருப்பதால் நான் பெருமையடைகிறேன். புல்டோசர் என்று யோகியை விமர்சிக்கின்றனர். அவரைப்போல வளர்ச்சி பணிகளை யாரும் செய்யவில்லை என பிரதமர் மோடி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.