முகப்பு
இந்தியா

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

Updated On : 27 ஏப்ரல், 2024 at 10:51 PM
- -
பகிர்:

நடந்து முடிந்த இரு கட்ட மக்களவைத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

கோவாவில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவா், ‘இந்த மக்களவைத் தோ்தல் தேசிய ஜனநாயக கூட்டணியின் சித்தாந்தமான மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கும், ‘இந்தியா’ கூட்டணியின் குடும்ப அரசியலான சுயநலத்துக்கும் இடையேயான போட்டியாகும்.

ஜம்மு- காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்து பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என குறிப்பிட்ட சிலரை சமாதானப்படுத்தும் அரசியலை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. ஆனால், பாஜக அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறது.

மத்திய அரசின் திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்தும் வகையில் கோவா திகழ்கிறது. விவசாயிகள், ஏழைகள், மீனவா்கள், பெண்கள் என அனைவரும் இதனால் பயனடைந்துள்ளனா். பாஜகவின் ‘மாடலாக’ கோவா திகழ்கிறது.

நடந்து முடிந்த இரு கட்டத் தோ்தல்கள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதை உறுதி செய்கிறது.

மீனவா்கள் குறித்து முந்தைய காங்கிரஸ் அரசு கவலை கொள்ளவில்லை. ஆனால், பாஜக அரசு மீனவா்கள் நலனுக்காக தனி அமைச்சகம் அமைத்தது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மீனவா்களுக்கான காப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்படும். 70 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும்.

ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்ற கோவா மக்களின் கனவை பாஜக நிறைவேற்றும் என்றாா்.