முகப்பு
இந்தியா

வயநாடு நிலச்சரிவு நாட்டுக்கு ஒரு பயங்கர சோகம்: ராகுல்

வயநாடு நிலச்சரிவு நாட்டுக்கு ஒரு பயங்கர சோகம் என்று ராகுல் கூறியிருக்கிறார்.

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 12:53 PM
வயநாட்டில் பிரியங்கா, ராகுல்
பகிர்:

வயநாடு: நிலச்சரிவால் பலரும் தங்களது குடும்பங்களை இழந்துள்ளனர். நாட்டு மக்கள் அனைவரும் உதவ வேண்டும். நிலச்சரிவு நாட்டுக்கு ஒரு பயங்கர சோகம் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

கேரள வயநாட்டில் நிலச்சரிவால் பாதித்த மக்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் உதவ வேண்டும் என்று கூறியிருக்கும் ராகுல், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் அப்பகுதியில் குடியேற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் நேரிட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் மக்களை காங்கிரஸ் எம்.பி. ராகுல் மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆகியோர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

அப்போது பேசிய ராகுல், இந்த மிக மோசமான காலக்கட்டத்தில், பிரியங்காவும் நானும் வயநாடு மக்களுடன் துணை நிற்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரள அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. மீட்பு, நிவாரண மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களை நாங்கள் கண்காணித்து, தேவையான உதவிகளை வழங்குவோம் என்று கூறியுள்ளார்.

ஏராளமான மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களையும் வீடுகளையும் இழந்துவிட்டு நிற்பதைப் பார்க்கும்போது மனதுக்கு வலியை தருகிறது. தொடர்ந்து இயற்கை பாதிப்புகள் நேரிடுவது கவலையை ஏற்படுத்துகிறது. உடனடியாக ஒருங்கிணைந்த செயல்திட்டத்தைக் கொண்டுவருவது அவசியம் என்றார் ராகுல்.

சூரல்மலா சென்ற ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் நீல நிற மழைக்கால உடையை அணிந்துகொண்டு, நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைய தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பாலத்தைக் கடந்து சென்றனர்.

இன்று காலை 9.30 மணிக்கு, பிரியங்காவும் ராகுலும் கன்னூர் விமான நிலையம் வந்து அங்கிருந்து சாலை வழியில் வயநாடு வந்தடைந்தனர்.

திங்கள்கிழமை இரவு முதல் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, நிலச்சரிவு ஏற்பட்டு, முண்டக்கை, சூரல்மலா, அட்டமலை, நூல்புழை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 173 பேர் பலியாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.