நாடு முழுவதும் 95% கிராமங்களுக்கு இணைய வசதி: மத்திய அரசு
நாடு முழுவதும் 95 சதவீத கிராமங்களுக்கு இணைய வசதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புது தில்லி: எண்ம (டிஜிட்டல்) இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 95 சதவீத கிராமங்கள் தற்போது 3ஜி/4ஜி செல்போன் தொடர்புடன் இணைய வசதி பெற்றுவிட்டன என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் மார்ச் மாத தரவுகளின்படி, 95.44 கோடி இணையதள பயனாளர்கள் உள்ளனர். அதில், 39.83 கோடி பயனர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் மொத்தமுள்ள 6,44,131 கிராமங்களில், 6,12,952 கிராமங்களுக்கு 3ஜி/4ஜி செல்போன் தொடர்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள 95.15 சதவீத கிராமங்களுக்கு இணையவசதி கிடைக்கப்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள நகரங்களை மட்டுமல்ல, இரண்டாம் மற்றும் மூன்றாம் நகரங்களையும், ஊரக மற்றும் கிராமப்புற பகுதிகளையும் இணைய சேவையில் இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில், நாடு முழுவதும் இணைய மற்றும் தொலைத் தொடர்பு சேவை மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் அகண்டசேவை வழங்குவதற்கு பாரத் நெட் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டம் மூலம், 42,000 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் மீதமுள்ள 3.84 லட்சம் கிராமங்களுக்கு ஆப்டிகல் ஃபைபர் இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. மேலும், 1.5 கோடி கிராமப்புற வீட்டு ஃபைபர் இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது மொத்தமுள்ள 2.22 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில், இரட்டை வழி பாரத் ஜெட் மூலம் 2.13 லட்சம் கிராமங்களுக்கு சேவை வழங்க தயாராக உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, 'இந்திய டெலிகிராப் ரைட் ஆஃப் வே (ஆர்ஓடபிவள்யு) விதிகள் 2016' ஐ வெளியிட்டதோடு, தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை விரைவாகவும் எளிதாகவும் வெளியிடுவதற்கு அவ்வப்போது விதிகளை திருத்தியும் வருகிறது. இதன்மூலம், எல்லைப் பகுதிகளில் செல்போன் கோபுரங்களை இணைக்கும் நடவடிக்கைகளை எளிமைப்படுத்தி அதற்கான ஒப்புதலும் எளிதாகக் கிடைக்கப்பெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.