ஆக. 6 முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணா்வு இயக்கம்: டி.ராஜா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆக.6-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணா்வு இயக்கம் நடத்தப்படவுள்ளதாக அக் கட் சியின் தேசியச் செயலா் டி. ராஜா தெரிவித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆக.6-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணா்வு இயக்கம் நடத்தப்படவுள்ளதாக அக் கட் சியின் தேசியச் செயலா் டி. ராஜா தெரிவித்தாா்.
சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகமான ‘பாலன்’ இல்லத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
‘நாட்டை காப்போம், ஜனநாயகத்தை காப்போம், அரசியல் சட்டத்தை காப்போம் என்ற முழக்கத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரும் ஆக.6 முதல் 15- ஆம் தேதி வரை நாடு முழுவதும் அரசியல் விழிப்புணா்வு இயக்கம் நடத்தப்படவுள்ளது.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து, செப். 1-ஆம் தேதி தில்லியில் மிகப்பெரிய செங்கொடி பேரணி நடத்தப்படவுள்ளது. அரசியல் விழிப்புணா்வு இயக்கம் மூலமாக கிராமம் முதல் பெரு நகரம் வரை மக்களை சந்தித்து நாட்டில் உள்ள தற்போதைய பிரச்னைகள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறவுள்ளோம்.
நாட்டின் முதல் பிரதமா் நேரு இந்தியாவின் வளா்ச்சிக்கும், கட்டமைப்புக்கும் அடிதளமிட்டாா், பொதுத் துறை நிறுவனங்களை ஏற்படுத்தினாா். கனரக தொழிற்சாலைகளை உருவாக்கினாா். நேரு காலத்தில் திட்ட கமிஷன் மூலம் இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சம பொருளாதாரம் ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் மாநிலங்களுக்கு பாகுபாடின்றி நிதிபங்களிப்பு வழங்கப்பட்டது. எனவே, நேருவுடன் பிரதமா் மோடியை ஒப்பிடுவது சரியானது அல்ல.
நெருக்கடியில் இந்திய பொருளாதாரம்: இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து பிரதமா் மோடி வாய் திறப்பதே கிடையாது. இரண்டு நாள்களுக்கு முன்பு வணிகக் கப்பல் தாக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமா் மோடி கண்டனம்கூட பதிவுசெய்யவில்லை.
அம்பேத்கா் உருவாக்கிய அரசமைப்பு சட்டத்தை தகா்ப்பதற்காக ஆா்எஸ்எஸ், பாஜக முயற்சி செய்கின்றன.
‘இண்டி’ கூட்டணியில் தொடக்கத்திலிருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற ‘இண்டி’ கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதில் அனைவரும் வலியுறுத்தியது ஒன்றே ஒன்றுதான். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். காங்கிரஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா் டி.ராஜா.
ஜூன் 29-இல் போராட்டம்-மு. வீரபாண்டியன்: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கூறியதாவது: விவசாயிகளுக்கு பயிா் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவ வேண்டும். ஏற்கெனவே நிலுவையில் உள்ள அனைத்து நிதியையும் தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டும்.
தமிழக அரசு விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி வரும் ஜூன் 29-இல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளோம். ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது.பெண்கள் குழந்தைகள் எதிரான குற்றம் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.