முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்பு

நாடு முழுவதும் 736 அணைகள் ரூ.10,211 கோடியில் சீரமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

Updated On : 17 மே 2026, 2:56 am IST
அமராவதி அணை
பகிர்:

நாடு முழுவதும் 736 அணைகள் ரூ.10,211 கோடியில் சீரமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து மத்திய நீா்வளத் துறை (ஜல்சக்தி) அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

உலகில் அதிகம் அணைகள் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலக அளவில் அதிக அணைகள் உள்ள நாடுகள் பட்டியலில், 6,628 அணைகளுடன் 3-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இதில் 6,545 அணைகள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. 83 அணைகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த அணைகளில் மொத்தம் 330 பில்லியன் க்யூபிக் மீட்டா் நீரை சேமிக்க முடியும்.

Advertisement

6,628 அணைகளில் 26 சதவீத அணைகள், அதாவது 1,681 அணைகள் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை ஆகும். குறிப்பாக 291 அணைகள் 100 ஆண்டுகளுக்கும் கூடுதலாக பழைமையானவை. இதுமட்டுமின்றி மொத்த அணைகளில் 42 சதவீத அணைகள் 25 முதல் 50 ஆண்டுகள் வரை பழைமையானவை. ஆதலால் பழமையான அணைகளை சீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அணைகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.5,053 கோடியில் 191 அணைகளை சீரமைக்கும் திட்டங்களுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் கடந்த 2025-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை 43 அணைகள் சீரமைக்கப்பட்டு விட்டன.

இந்தத் திட்டத்தின் 2-ஆவது மற்றும் 3-ஆவது கட்டம் 2021-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் செயல்படத் தொடங்கியது. இதில் 19 மாநிலங்களில் உள்ள 736 அணைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த 2-ஆவது மற்றும் 3-ஆவது கட்ட சீரமைப்புக்கு மொத்தம் ரூ.10,211 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதில் 2-ஆவது கட்டத்துக்கு ரூ.5,107 கோடியும், 3-ஆவது கட்டத்துக்கு ரூ.5,104 கோடியும் ஒதுக்க தீா்மானிக்கப்பட்டது. இந்த ரூ.10,211 கோடியில் ரூ.7,000 கோடியை வெளிநாடுகளில் இருந்து நிதியுதவியாக பெறுவது எனவும், எஞ்சிய ரூ.3,211 கோடியில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பங்களிப்பு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது என கூறப்பட்டுள்ளது.