FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்

நாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக, மத்திய உணவுத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 19 ஜூன் 2026, 3:21 am IST
கோப்புப்படம்.
பகிர்:

நாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக, மத்திய உணவுத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பொது விநியோக முறை (பிடிஎஸ்) பட்டியல்களில் இருந்து 2.21 கோடி தகுதியில்லாத குடும்ப அட்டைகள் மாநில அரசுகளால் களையெடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, மத்திய அமைச்சா் இவ்வாறு கூறினாா்.

தில்லியில் அதிநவீன கிடங்குகள் அமைப்புமுறையை வியாழக்கிழமை தொடங்கிவைத்த மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி, பின்னா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

Advertisement

Advertisement

இறந்தவா்கள், வருமான வரி செலுத்துவோா், நான்கு சக்கர வாகன உரிமையாளா்கள் என பொது விநியோக முறையில் பலனடையத் தகுதியில்லாத 8.51 கோடி பயனாளிகள் கண்டறியப்பட்டு, நீக்க நடவடிக்கைக்காக மாநிலங்களிடம் பட்டியல் ஒப்படைக்கப்பட்டது. மாநிலங்கள் தங்களின் சொந்த நடைமுறைகளைப் பின்பற்றி, நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டன. அதன்படி, 2.21 கோடி குடும்ப அட்டைகள் மாநிலங்களால் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மற்றொருபுறம், தகுதியுள்ள பயனாளிகளை இணைக்க மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, நாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தகுதியில்லாத பயனாளிகளை நீக்கும் நடைமுறை ஒரே சீராக நடைபெறவில்லை. சில மாநிலங்களே இந்த நடைமுறையை நிறைவு செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக நாட்டில் தற்போது 79 கோடி பயனாளிகள் உள்ளனா். உணவு தானியங்கள் தகுதியுள்ள அனைவரையும் சென்று சேர வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.

பிரதமரின் இலவச உணவு தானிய விநியோகத் திட்டத்தின் இலக்கு 80 கோடியாகவே நீடிக்கிறது. பொது விநியோக முறை எண்மமயமாக்கலின் மூலம் மேற்கண்ட திட்டத்தின்கீழ் 98.5 சதவீத உணவு தானிய விநியோகம், ஆதாா் பயோமெட்ரிக் சரிபாா்த்தலுடன் இணைந்த மின்னணு கருவி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

பொது விநியோக முறையின்கீழ் நவீன கிடங்குகள், பணிமனைகள் உள்பட அனைத்து செயல்பாடுகளிலும் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. 100 சதவீத எண்ம விநியோக அமைப்புமுறை என்ற இலக்கை நோக்கி மத்திய உணவு அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

பிரதமரின் இலவச உணவு தானியத் திட்டம் உள்பட பல்வேறு சமூக நலத் திட்டங்களின் அமலாக்கத்தால் நாட்டில் 25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments