செல்ஃபி மோகம்: மலை உச்சியிலிருந்து 100 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண் போராடி மீட்பு
இளம்பெண் போராடி மீட்கப்பட்ட சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.
செல்ஃபி மோகத்தால் மலை உச்சியிலிருந்து 100 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண் போராடி மீட்கப்பட்ட சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சேர்ந்த 29 வயதான நஸ்ரின் என்ற பெண்மணி சனிக்கிழமை(ஆக. 3) மாலை வேளையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சத்தாரா பகுதியில் அமைந்துள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றுள்ளார்.
அப்போது நீர் பொங்கிப்பாயும் அருவியின் இயற்கை அழகை ரசித்தபடி மலை உச்சியில் ஆபத்தான பகுதியில் நின்றுகொண்டு அவர் செல்ஃபி எடுக்க முற்பட்டபோது கால்தவறி கீழேயுள்ள 100 அடி பள்ளத்தில் விழுந்துவிட்டார்.
Advertisement
இதனைத்தொடர்ந்து வனத்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி பரிதவித்து ஊசலாடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்புக்குழுவினர் உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து கயிறு கட்டி பத்திரமாக மேலே கொண்டு வந்துள்ளனர்.
நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மீட்கப்பட்டுள்ள பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.