வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீட்புப் படையினர் தேடி எடுத்த 31 அடையாளம் தெரியாத உடல்களை இன்று நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன.
நிலச்சரிவின்போது, அப்பகுதிகளில் இருந்ததாகக் கண்டறியப்பட்டிருக்கும் 180 பேரின் நிலைமை என்னவானது என்பது இதுவரை தெரிய வரவில்லை. இன்னும் பல பேர் இங்கு இருந்திருக்கலாமா என்று ஆராயும் பணிகளும் தொடங்கியிருக்கின்றன.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்குள் பொது மக்கள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. வீடுகளுக்குள் சென்று திருட்டுச் சம்பவங்கள் நடைபெறலாம் என்பதற்காக இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சூரல்மலை மற்றும் முண்டக்கை இடையே காலை 6 முதல் 9 மணி வரை பெய்லி பாலம் வழியாக 1500 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை, டிரோன்கள் உதவியுடன் தேடி மண்ணுக்குள் புதைந்திருந்த சில உடல்களை ராணுவத்தினர் எடுத்தனர். மேலும் இன்றும் அந்தப் பணிகள் தொடர்கின்றன.
வயநாடு மாவட்டத்தில், ஒரு வார காலத்துக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்கள் இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் 4 மோப்ப நாய்களும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. புதுமலை பகுதியில் அடையாளம் தெரியாத 8 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
இன்று, புதுமலைப் பகுதியில் அடையாளம் தெரியாத 31 உடல்கள் மற்றும் 158 உடல் பாகங்களை நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன. காணாமல் போனவர்களின் பட்டியலை அங்கன்வாடி மையங்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று பெரிய அளவில் அதிக உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, ஆலப்புழை, எர்ணாகுளம் பகுதிகளுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.