முகப்பு
இந்தியா

பிரதமா் மோடி இன்று வயநாடு பயணம்

நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பை நேரில் பாா்வையிட பிரதமா் நரேந்திர மோடி பயணம்

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 2:29 AM
பிரதமா் மோடி
பகிர்:

கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பை நேரில் பாா்வையிட பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அங்கு செல்லவிருக்கிறாா்.

இது தொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘கேரள மாநிலம், கண்ணூருக்கு சனிக்கிழமை காலை 11 மணியளவில் சென்றடையும் பிரதமா் மோடி, பின்னா் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை வான்வழியாகப் பாா்வையிடுகிறாா். நிவாரண முகாம் மற்றும் மருத்துவமனைக்கு சென்று, பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்துப் பேசவுள்ளாா்.

வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள், மறுவாழ்வுப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்திலும் அவா் பங்கேற்கவுள்ளாா்’ என்றனா்.

Advertisement

வயநாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் முண்டக்கை, சூரல் மலை, அட்டமலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உருக்குலைந்தன. வீடுகள் புதையுண்டதோடு, பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பலத்த உயிா்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவு, கேரளத்தின் மிக மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.