விடியல் பயணத் திட்டத்தைப் போல ஆந்திரத்திலும் புதிய திட்டம்!
தமிழகத்தைப் போல ஆந்திரத்திலும் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயண வசதித் திட்டம் தொடங்கப்படவுள்ளது
ஆந்திரப் பிரதேசத்திலும் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில், தெலுங்கு தேசக் கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 'சூப்பர் சிக்ஸ்' என்ற பெயரில் வாக்குறுதிகளை அளித்திருந்தது. தற்போது, அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாக, தெலுங்கு தேசக் கட்சி தெரிவிக்கிறது.
இந்த நிலையில், ஆந்திரத்தின் சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகத்தில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி பேசியதாவது, ``மிகவும் எதிர்பார்க்கப்பட்ட `பெண்களுக்கு இலவசப் பேருந்து வசதித் திட்டம்’ விரைவில் தொடங்கப்படும்.
மாநிலத்தை விபத்து இல்லாத மாநிலமாக மாற்றவும், எங்கள் பயணிகளுக்கு தரமான சேவைகளை வழங்கவும் நாங்கள் முயற்சித்து வருகிறோம்.
மக்களின் வருமானத்தில் லாபத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அரசு உறுதிபூண்டுள்ளது.
ஊழியர்களின் நீண்டகாலப் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள், முதல்வருடன் விவாதிக்கப்பட்டு, அவற்றிற்கு விரைவில் தீர்வு காணப்படும்.
ஆனால், முந்தைய ஒய்.எஸ்.ஆர்.சி. ஆட்சியில், சாலைப் போக்குவரத்துத் துறையில் எந்த வளர்ச்சியும் ஏற்படுத்தப்படவில்லை’’ என்று தெரிவித்தார்.