முகப்பு
இந்தியா

மருத்துவ மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்: மம்தா

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்..

Updated On : 12 ஆகஸ்ட், 2024 at 3:59 PM
மம்தா
பகிர்:

மேற்கு வங்க மாணவி கொலை வழக்கில் காவல்துறையால் தீர்க்கப்படாவிட்டால் சிபிஐக்கு மாற்றப்படும் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை(ஆக.8) இரவுப் பணிக்கு வந்த பெண் பயிற்சி மருத்துவர், வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

முதற்கட்டமாக, மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இதனிடையே, கருத்தரங்கு அறையில் இருந்து ரத்தக் கறைகள் உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டு குற்றவாளி இல்லாமல், குற்றம் எவ்வாறு நடந்திருக்கலாம் என்று காவலர்கள் சம்பவத்தை நடத்திப் பார்த்திருக்கிறார்கள்.

இவர் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் அல்ல என்றும், அவர் தன்னார்வலராக பணியாற்றி, மருத்துவமனையை அடிப்படையாக வைத்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதும், இவர் அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை காலை, பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சனிக்கிழமை, இந்த நபர் கைதாகியிருக்கிறார். உடல்கூறாய்வு முடிவுக்காக காவல்துறையினர் காத்திருக்கிறார்கள். அதில், வேறு சிலருக்கும் இந்த குற்றச்செயலில் தொடர்பிருக்கலாமா என்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் முதல்வர், துணைத் தலைவர் உள்ளிட்ட பலரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவ மாணவியின் பெற்றோரைச் சந்தித்து முதல்வர் மம்தா ஆறுதல் கூறினார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

மருத்துவ மாணவி கொலை வழக்கில் காவல்துறையால் தீர்க்கப்படாவிட்டால், இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.