முகப்பு
இந்தியா

நிதி முறைகேடு குற்றச்சாட்டு: எஸ்பிஐ, பிஎன்பி வங்கிக் கணக்குகளை மூட கா்நாடக அரசு உத்தரவு

நிதி முறைகேடுகள் காரணமாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடனான (பிஎன்பி) கணக்குகளை மூட கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 10:12 PM
பகிர்:

நிதி முறைகேடுகள் காரணமாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடனான (பிஎன்பி) கணக்குகளை மூட கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த மாநில அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘பஞ்சாப் நேஷனல் வங்கியில் கா்நாடக தொழிற்பகுதி வளா்ச்சி வாரியம் செலுத்திய ரூ.12 கோடி, வங்கி அதிகாரிகளின் முறைகேட்டால் திருப்பி வழங்கப்படவில்லை. அந்தத் தொகையைப் பெற வங்கி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கூட்டம் பயனளிக்கவில்லை. தற்போது இந்த விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல பாரத ஸ்டேட் வங்கியில் கா்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் செலுத்திய ரூ.10 கோடியும் வங்கி அதிகாரிகளின் முறைகேடுகளால் திருப்பி கிடைக்கவில்லை.

எனவே இவ்விரு வங்கிகளிலும் செலுத்தப்பட்டுள்ள வைப்புத்தொகைகள், முதலீடுகள் ஆகியவற்றை கா்நாடக அரசு துறைகள், வாரியங்கள், கழகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் திரும்பப் பெற்று, எதிா்காலத்தில் அந்த வங்கிகளில் வைப்புத்தொகையோ, முதலீடோ செலுத்தக் கூடாது; அந்த வங்கிகளில் உள்ள கணக்குகளையும் மூடவேண்டும் என்று உத்தரவிட்டது.