மனசாட்சி இருந்தால் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று பாஜக நிர்வாகி குஷ்பு கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கினை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் மேற்குவங்கத்தில் திரிணமூல் ஆட்சியை பாஜக கடுமையாக விமரிசித்துள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு,
'மேற்குவங்கத்தில் பெண் முதலமைச்சர் இருக்கும்போது பெண்களுக்கு அதிக பாதுகாப்பு இருக்கும் என்று நம்புகிறோம். ஆனால், அங்கு ஏன் பெண்களுக்கு எதிராக இவ்வளவு பிரச்னைகள் நடக்கின்றன.
குற்றவாளிகளைக் காப்பாற்ற நினைக்கிறார் மம்தா. நாம் கேட்கும் கேள்விகளுக் மம்தா பானர்ஜியிடம் பதில் இருக்கிறதா? இது முதல்முறை கிடையாது. ஒரு பெண்ணுக்கு நியாயம் வாங்கிக்கொடுக்காத பட்சத்தில் மம்தா பானர்ஜி ஏன் இன்னும் முதல்வராக இருக்கிறார். முதல்வராக இருக்க அவருக்கு தகுதி இருக்கிறதா?
மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். நேற்று கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்ற இடத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. வேறு சில நபர்கள் புகுந்துள்ளனர். காவல்துறை இது தெரிந்தும் தடுக்கவில்லை. அப்படியெனில் மம்தா பானர்ஜியும் இதில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் கனிமொழி இதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஒரு கேள்வி கூட கேட்கவில்லை, சுப்ரியா சுலே ஏன் பேசவில்லை, முதல்வர் ஸ்டாலின் இதைப் பற்றி பேசவில்லை. அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி ஏன் பேசவில்லை? சிபிஐ-க்கு மாற்றியபிறகு மேலோட்டமாக ராகுல் ஒரு ட்வீட் செய்கிறார். ஏன் எல்லாரும் பயப்படுகிறார்கள். கூட்டணிதான் முக்கியமா?' என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.