காங்கிரஸ் ஆட்சிக் காலக் கொள்கைகளால் அகதிகளுக்கு குடியுரிமை மறுப்பு: அமித் ஷா!
கடந்தகால காங்கிரஸ் ஆட்சியின் கொள்கைகளால் அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கொள்கைகளால் ஏராளமான அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இன்று 188 ஹிந்து அகதிகளுக்கு குடியுரிமைக்கானச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி முடிந்து அகமதாபாத்தில் பேசிய அமித்ஷா குடியுரிமை திருட்தச் சட்டம் (சிஏஏ) லட்சகணக்கான அகதிகளுக்கு உரிமைகளையும் நீதியையும் வழங்கும் என்று தெரிவித்தார்.
மேலும், இந்தச் சட்டத்தில் எவருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லையென்று இஸ்லாமியர்களுக்கு அமித்ஷா உறுதியளித்தார்.
”முந்தைய ஆட்சிகளில் கோடிக்கணக்கான ஊடுருவாளர்களை நாட்டிற்குள் அனுமதித்து சட்டவிரோதமாக அவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளனர். அதே நேரத்தில், சட்டத்தை சரியாகப் பின்பற்றி குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சட்டத்தில் அதற்கான இடமில்லை என்று குடியுரிமை வழங்க மறுத்துவிட்டனர்.
ஏனெனில், கடந்தகால காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி ஆட்சிகளில் அவர்களின் கொள்கைகளால், நாட்டிற்கு அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு உரிமைகளும், நீதியும் கிடைக்கவில்லை” என்று அமித் ஷா கூறினார்.
மேலும், வங்கதேசப் பிரிவினையின் போது 27 சதவீத ஹிந்துக்கள் அங்கு இருந்ததாகவும், ஆனால் தற்போது வெறும் 9 சதவீத ஹிந்துக்கள் மட்டுமே இருப்பதாகவும் பெரும்பாலானவர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார்.