முகப்பு
இந்தியா

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் மீது மற்றொரு குற்றச்சாட்டு!

2021 முதல் மருத்துவமனை மீது அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க எஸ்ஐடி குழு நியமனம்

Updated On : 20 ஆகஸ்ட், 2024 at 6:08 AM
சந்தீப் கோஷ் (கோப்புப் படம்)
பகிர்:

கொல்கத்தாவில் சர்ச்சையில் சிக்கியுள்ள ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் அரசு நடத்தி வரும் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில், ஆக. 9 ஆம் தேதியில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில், கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, கடந்த ஜூன் மாதத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சந்தீப்பின் பதவிக்காலத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் குறிப்பிடப்படுவதால், அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, 2021 முதல் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மீது அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, காவல்துறை தலைவர் பிரணாப் குமார் தலைமையில் காவல்துறை துணைத் தலைவர் சையத் வக்கார் ரசா, சிஐடியின் டிஐஜி சோமா மித்ரா தாஸ், கொல்கத்தா காவல்துறையின் துணை ஆணையர் இந்திரா முகர்ஜி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை, மேற்கு வங்க அரசு நியமித்துள்ளது.

மருத்துவமனையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த பெண் மருத்துவரின் மரணத்தைத் தொடர்ந்து, சந்தீப்பிடம், கடந்த நான்கு நாள்களில் கிட்டத்தட்ட 53 மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிரிழந்த மருத்துவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிப்பதில் ஏற்படுத்திய தாமதம் குறித்தும், குற்றம் நடந்த அறைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு தொடர்பான கேள்விகள் குறித்தும் எழுப்பப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.