தில்லி முதல்வர் கேஜரிவால்  Center-Center-Delhi
இந்தியா

கேஜரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை செப்.5-க்கு ஒத்திவைப்பு!

அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணையை செப். 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..

PTI

கலால் கொள்கை ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தன்னை கைது செய்ததை எதிா்த்தும், ஜாமீன் கோரியும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பா் 5ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த விவகாரம் நீதிபதிகள் சூா்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் எதிா் பதில் மனுவைத் தாக்கல் செய்ய சிபிஐக்கு அனுமதி அளித்தும், மறுப்பு பதில் மனுவை தாக்கல் செய்ய கேஜரிவாலுக்கு இரண்டு நாள்கள் அவகாசமும் நீதிபதிகள் அளித்தனா்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கேஜரிவால் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, சிபிஐ ஒரு மனு மீது மட்டும் எதிா் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ததாகவும், அது வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தங்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் கூறினாா்.

அதற்கு சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் மற்றொரு பதில் மனுவை தாக்கல் செய்ய உள்ளோம்’ என்றாா்.

இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பா் 5ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

இதனிடையே, சிபிஐயால் தாம் கைது செய்யப்பட்டதை எதிா்த்து கேஜரிவால் தாக்ல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கையில், ‘தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் வரிக் கொள்கையை வகுப்பதில் அனைத்து முக்கிய முடிவுகளும் அப்போதைய துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் அனுசரணையுடன் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ‘அரசியல் ரீதியாக பரபரப்பாக்க‘ கேஜரிவால் முயற்சி செய்கிறாா். அவா் கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் குற்றச் சதியில் ஈடுபட்டுள்ளாா். விசாரணையை ‘வேண்டுமென்றே தடம் புரளச் செய்ததால் விசாரணையின் நியாயமான முடிவுக்காக ஜூன் 26-ஆம் தேதி அவரைக் கைது செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.

‘மேலும், பதிவில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அவரைக் கைது செய்யப்பட வேண்டிய அவசியம் எழுந்தது. மேலும் மனுதாரா் ஜூன் 25 அன்று விசாரணையின்போது அவா் ஏய்க்கும் வகையிலும் ஒத்துழைக்காமல் இருந்ததால் அவா் கைது செய்யப்பட்டாா் என்றாா் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜாமீன் மறுப்பை எதிா்த்தும், இந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதை எதிா்த்தும் கேஜரிவால் இரண்டு தனித்தனி மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளாா்.

தில்லி உயா்நீதிமன்றம் ஆகஸ்ட் 5ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அவா் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளாா்.

ஆகஸ்ட் 14 அன்று, இந்த வழக்கில் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்ததுடன், அவரைக் கைது செய்ததை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நிறுவனத்திடம் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. முன்னதாக, ஜூன் 26-ஆம் தேதி கேஜரிவாலை சிபிஐ கைது செய்தது.

தில்லி உயா்நீதிமன்றம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல்வரைக் கைது செய்ததை சட்டபூா்வமாக உறுதி செய்தது. மேலும், சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கைகளில் எந்தவிதமான தீங்கிழைக்கும் நோக்கமும் இல்லை என்று கூறியது.

மேலும், சிபிஐ வழக்கில் வழக்கமான ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை நாடுமாறு உயா் நீதிமன்றம் கேஜரிவாலை கேட்டுக்கொண்டது.

சி.பி.ஐ. கேஜரிவாலை கைது செய்ததைத் தொடா்ந்து, உரிய ஆதாரங்களை சேகரித்ததால், முதல்வருக்கு எதிரான ஆதாரங்களின் தகவல்கள் மூடப்பட்டுவிட்டன என்றும், எந்த நியாயமான காரணம் இல்லாமல் அது நடந்ததாகவோ அல்லது சட்டவிரோதமோ என்று கூற முடியாது என்றும் உயா்நீதிமன்றம் குறிப்பிட்டது.

மேலும், ‘சாட்சிகள் மீது அவா் வைத்திருக்கும் கட்டுப்பாடு மற்றும் செல்வாக்குக்கு முகாந்திரம் உள்ளது. மனுதாரரைக் கைது செய்த பின்னரே சாட்சியாக இருப்பதற்கான தைரியத்தைத் இந்த சாட்சிகளிடமிருந்து திரட்ட முடியும்’ என்று சிறப்பு வழக்குரைஞா் கூறியுள்ளாா் என்று நீதிமன்றம் கூறியது.

2024 ஏப்ரலில் போதுமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்ட பின்னரே, அவருக்கு எதிராக மேலும் விசாரணையை சிபிஐ தொடா்ந்தது என்று கூறி, கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த மாா்ச் 21ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முதலமைச்சருக்கு, பணமோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜூன் 20ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் தடை விதித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT