அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டைக்கு ரூ.113 கோடி செலவிடப்பட்டதாக கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை கடந்த ஜனவரி 22 அன்று வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. அரசியல் தலைவர்கள் உள்பட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வுக்கு ரூ. 113 கோடி செலவாகியதாக ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கோவில் கட்டுமானத்திற்கு இதுவரை ரூ. 1800 கோடி வரை செலவிட்டுள்ளதாகவும், அடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு கட்டமாக நடத்தப்படவுள்ள கட்டுமானப் பணிகளுக்குக் கூடுதலாக ரூ.670 கோடி வரை தேவைப்படும் என்றும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அறங்காவலர்கள் குழு 2023-24 நிதியாண்டுக்கானக் கணக்குகளைச் சரிபார்த்துள்ளனர். செப்டம்பரில் அதற்கான வருமான வரித் தாக்கல் செய்யப்படவுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் ராமர் கோவிலுக்கு 20 கிலோ தங்கமும், 13 குவிண்டால் வெள்ளியும் பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகக் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அறக்கட்டளையின் பொதுச் செயலரான சம்பத் ராய் கூறுகையில் ஏப்ரல் 1, 2024 முதல் மார்ச் 31, 2025 வரைக்குமான திட்டமிடப்பட்ட செலவு ரூ. 800 கோடி என தெரிவித்தார்.
மேலும், 2023-24 நிதியாண்டில் மொத்த செலவு ரூ. 676 கோடி என்றும், மொத்த வருவாய் ரூ. 363.34 என்று தெரிவித்துள்ள அறக்கட்டளை அதில் ரூ.204 வங்கி வட்டித் தொகையாகவும், ரூ. 58 கோடி நன்கொடையாகவும் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.