முகப்பு
இந்தியா

கலால் கொள்கை வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

பி.ஆர்.எஸ். மூத்த தலைவர் கவிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

Updated On : 27 ஆகஸ்ட், 2024 at 1:25 PM
கவிதாவுக்கு கிடைத்தது ஜாமீன்
பகிர்:

தில்லி கலால் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் பி.ஆர்.எஸ். மூத்த தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சித் தலைவா் சந்திரசேகா் ராவின் மகளும் கட்சி எம்எல்சி-யுமான கே.கவிதாவை அமலாக்கத் துறையினர் கடந்த மார்ச் 15 அன்று ஹைதராபாத்தில் கைது செய்தது. அதன்பின்னர் ஏப்ரல் 11-ஆம் தேதியன்று திகார் சிறையிலிருந்து அவரை சிபிஐ கைது செய்தது.

இதையடுத்து மதுபானக் கொள்கை தொடர்பான விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கவிதா தாக்கல் செய்திருந்த வழக்கில், சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி ஒருநாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

Advertisement

இந்த நிலையில், நீதிபதிகள் பி.ஆர்.கவை மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

கவிதா கடந்த ஐந்து மாதங்களாகக் காவலில் இருப்பதாகவும், இந்த வழக்குகளில் அவருக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டது.

கவிதாவுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்குரைஞர்கள் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த நிலையில், அதை நிராகரித்து உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ நேர்மையாக விசாரணை நடத்துகிறதா?

வழக்கில் தொடர்புடையவர்களில் சிலரை மட்டும் குற்றவாளிகளாக்கிவிட்டு மற்றவர்களை அரசு தரப்பு சாட்சியாகச் சேர்ப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியது.

விசாரணை என்ற பெயரில் ஒருவருக்குத் தண்டனை வழங்குவதை ஏற்க முடியாது. ஏற்கனவே பிணையை வழங்க மறுத்த தனி நீதிபதி தவறான வழிமுறையைக் கையாண்டு இருக்கிறார். பெண்களுக்கென சில சலுகைகள் இருப்பதைத் தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார் என்றும் கூறினார்.

தில்லி கலால் கொள்கை ஊழலில் கவிதா ஈடுபட்டுள்ளார் என்பதை நிரூபிப்பதற்கு அமலாக்கத் துறை மற்றும் சிபிஐயிடம் சரியான ஆதாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியதோடு, பி.ஆர்.எஸ். மூத்த தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.