டி.வி.சோமநாதன். 
இந்தியா

மத்திய அமைச்சரவை செயலராக பொறுப்பேற்றார் டி.வி.சோமநாதன்

மத்திய அமைச்சரவைச் செயலராக தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான டி.வி. சோமநாதன் (59) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

DIN

மத்திய அமைச்சரவைச் செயலராக தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான டி.வி. சோமநாதன் (59) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

அப்பதவியில் இருந்த ராஜீவ் கெளபாவின் பதவிக்காலம் செப்டம்பா் 30-ஆம் தேதி நிறைவடைந்ததையடுத்து, அப்பதவிக்கு சோமநாதனை நியமிக்க பிரதமா் தலைமையிலான உயா் பணி நியமனங்களுக்கான அமைச்சரவை ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியிருந்தது. பொறுப்பேற்கும் நாளில் இருந்து அவரது பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவைச் செயலராகும் முன்பு மத்திய நிதித் துறை, செலவினங்கள் துறைச் செயலராக சோமநாதன் பணியாற்றினாா். அதற்கு முன்னதாக மத்திய அரசுப்பணியில் பிரதமா் அலுவலக கூடுதல் செயலா், இணைச் செயலா் போன்ற பொறுப்புகளையும் மத்திய காா்ப்பரேட் விவகாரத் துறை இணைச் செயலா் பதவியையும் அவா் வகித்துள்ளாா்.

2019-இல் செலவினங்கள் துறை செயலராக இருந்த அவா், 2021, ஏப்ரலில் நிதித் துறைச் செயலராக இருந்தபோது, நாட்டில் கரோனா பரவலைத் தடுப்பதற்கான அனைத்து நிதி மற்றும் கொள்கை வகுப்பு ஒருங்கிணைப்புப் பணியை சாமாா்த்தியமாக மேற்கொண்டவா் என்று பிரதமா் மோடியால் பாராட்டப்பட்டாா்.

1996-இல் காா்ப்பரேட் விவகாரத் துறையில் இயக்குநராக இருந்த போது வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் இளம் தொழில்முறை வல்லுநா்கள் திட்டத்தின் கீழ் கிழக்காசியா மற்றும் பசிஃபிக் பிராந்திய நிதிப் பொருளாதார நிபுணராக அயல் பணியை மேற்கொண்டாா். பிறகு, உலக வங்கியின் நிதிநிலைக் கொள்கை வகுப்புக் குழுவின் மேலாளராக நியமிக்கப்பட்டாா். அதே வங்கியில் 2011 முதல் 2015-ஆம் ஆண்டுவரை இயக்குநராகப் பணியாற்றினாா்.

கரீப் கல்யாண், ஆத்மநிா்பாா் பாரதம் போன்ற அறிவிப்புகளை 2020-இல் பிரதமா் மோடி வெளியிட்ட போது அதற்கு பின்னால் நிதிச் சுமையை சமாளிப்பதில் சோமநாதன் முக்கியப் பங்காற்றினாா்.

1987-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சோமநாதன், தமிழக அரசுப் பணியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உருவாக்கப்பட்டபோது அதன் முதலாவது மேலாண் இயக்குநராகப் பணியாற்றினாா். அதற்கு முன்பாக, கூடுதல் தலைமைச் செயலா் அந்தஸ்தில் வணிக வரிகள் துறை துணை ஆணையராகப் பணியாற்றினாா். அந்த காலகட்டத்தில்தான் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) முறை முழு வீச்சில் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

ஏராளமான சஞ்சிகைகள், நாளிதழ்கள் போன்றவற்றில் பொருளாதாரம், நிதி, பொதுக் கொள்கைகள் தொடா்பாக 80-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் ஆய்வுக் குறிப்புகளையும் சோமநாதன் எழுதியுள்ளாா். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளியில் முனைவா் பட்டம், ஹாா்வா்டு பிசினஸ் ஸ்கூலில் நிா்வாகி வளா்ச்சித் திட்டச் சான்றிதழ் கல்வியை முடித்த அவா், பட்டயக் கணக்காளா் (சாா்ட்டா்ட் அக்கவுண்டன்ட்), செலவுக் கணக்காளா் (காஸ்ட் அக்கவுண்டன்ட்), நிறுவனச் செயலா் (கம்பெனி செகரட்டரி) ஆகிய பதவிகளுக்குரிய கல்வித் தகுதியையும் பெற்று பொருளாதார நிபுணராக விளங்குகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

SCROLL FOR NEXT