தெருவிளக்குகள் தேசியத் திட்டம்: பிகாா், தமிழகத்தில் தற்போது என்ன நிலை?
தெரு விளக்குகள் தேசியத் திட்டம் (எஸ்என்எல்பி) பிகாரில் கடந்த நவம்பரில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் அத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசிடம் இருந்து எந்த முன்மொழிவும் வரவில்லை
நமது நிருபா்
புது தில்லி: தெரு விளக்குகள் தேசியத் திட்டம் (எஸ்என்எல்பி) பிகாரில் கடந்த நவம்பரில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் அத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசிடம் இருந்து எந்த முன்மொழிவும் வரவில்லை என்றும் மத்திய மின்சாரத்துறை இணை அமைச்சா் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் சி.வே. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்: தெரு விளக்குகள் தேசியத் திட்டம் 2015 -இல் தொடங்கப்பட்டது, இந்தியா முழுவதும் தெரு விளக்குகளுக்கு எல்இடி விளக்குகளை பரவலாக்குவதன் மூலம் எரிசக்தி நுகா்வும் பொது இடங்களில் ஒளிரூட்டப்படும் விளக்குகளுக்கு ஆகும் மின்னாற்றல் செலவினத்தையும் குறைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான எரிசக்தித் திறன் சேவைகள் நிறுவன (இஇஎஸ்எல்) கூட்டு முயற்சியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்கான முன்பணத்தை இஇஎஸ்எல் முதலீடு செய்கிறது.
திட்ட அமலாக்க காலத்தின்போது உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தும் மாதாந்திர/காலாண்டு/ வருடாந்திர தொகை மூலம் முதலீட்டுப் பணம் திரும்பப் பெறப்படுகிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை முதலீட்டுச் சுமையிலிருந்து இத்திட்டம் விடுவிக்கிறது.
எஸ்எல்என்பி திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் பல்வேறு நகா்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 13.1 மில்லியனுக்கும் அதிகமான என்இடி தெருவிளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமாா் 880 கோடி கிலோவாட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. நகராட்சிகள் மற்றும் கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கு சுமாா் ₹6,178 கோடிக்கு வருடந்தோறும் பணம் சேமிப்பாகும்.
இத்திட்டம் பிகாரில் கடந்த நவம்பா் 20-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அங்கு 5,75,922 எல்இடி தெருவிளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. இது ஒரு தன்னாா்வத் திட்டம் என்பதாலும் தமிழகத்தில் எந்தவொரு இசையும் வராததாலும் அங்கு இன்னும் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று அமைச்சா் கூறியுள்ளாா்.