மகாயுதி கூட்டணி பதவியேற்பு விழாவில் பணம், தங்க நகைகள் திருட்டு!
மகாராஷ்டிரத்தில் மகாயுதி கூட்டணி பதவியேற்பு விழாவில் பணம், நகை திருட்டு...
மகாராஷ்டிரத்தில் மகாயுதி கூட்டணியின் பதவியேற்பு விழாவில், பணம், தங்கநகைகள், மொபைல் போன்கள் உள்பட ரூ. 12 மதிப்பிலான பொருள்கள் திருடு போனதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரியளவில் வெற்றிபெற்றது. பதவியேற்பு விழா டிச. 5 அன்று நடைபெற்றது. பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும், சிவசேனை கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகவும் பதவியேற்றனர்.
இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட, பல்வேறு அரசியல் தலைவர்களும், தொழில்துறையினர் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
பதவியேற்பு விழாவுக்கு சுமார் 4,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையும் படிக்க | இந்தியா கூட்டணிக்குத் தலைமை தாங்க மமதா தகுதியானவர்: சரத் பவார்!
இந்த நிலையில், இதில் கலந்துகொண்ட பலரிடம் இருந்து தங்கநகைகள், பணம், மொபைல் போன்கள் உள்ளிட்ட ரூ. 12 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடு போனதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
”நிகழ்வின் 2-வது வாயிலில் இருந்து வெளியேறிய மக்களிடம் திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். காவல்துறை மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் அந்தக் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளைக் கைது செய்வோம்” எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.