பிரதம மந்திரி சுரக்ஷா பீமா காப்பீடு திட்டத்தில் 48 கோடி பேர் பதிவு! ஏன்?
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா விபத்து காப்பீடு திட்டத்தில் 48 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சகம் தகவல்
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா விபத்து காப்பீடு திட்டத்தில் இதுவரையில் 48 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதம மந்திரி சுரக்ஷா பீமா (PMSBY) விபத்து காப்பீடு திட்டத்தின்கீழ், இதுவரையில் 47.59 கோடி பதிவு செய்துள்ளதாகவும், பெறப்பட்ட மொத்த உரிமைகோரல்களின் எண்ணிக்கை 1,93,964 என்றும், வழங்கப்பட்ட மொத்த உரிமைகோரல்களின் எண்ணிக்கை 1,47,641 என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலகக் கணக்கு வைத்திருக்கும் 18 முதல் 70 வயதுக்குள்பட்டவர்கள் இந்த திட்டத்தின்கீழ் பதிவு செய்யலாம். இந்த திட்டம் ஆண்டுதோறும் ரூ. 20 பிரீமியத்துடன் புதுப்பிக்கப்படும். இந்த திட்டம், விபத்தில் பலியானவர்களுக்கோ காயமடைந்தவர்களுக்கோ காப்பீடு வழங்குகிறது. விபத்தில் உயிரிழந்தால் ரூ. 2 லட்சமும், காயமடைந்து ஊனமுற்றால் ஒரு லட்சமும் வழங்கப்படும்.
பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா (PMJDY) திட்டம், 53 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாகவும் நிதி அமைச்சகம் கூறியது. இந்த திட்டத்தில் 53.13 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் உள்ளனர்.
இவர்களில் 55.6 சதவிகிதம் பேர் (29.56 கோடி) பெண்களே; 66.6 சதவிகிதம் பேர் (35.37 கோடி) கிராமப்புற மற்றும் வளர்ந்துவரும் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள். இந்த திட்டத்தில் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ. 2,31,236 கோடி நிலுவையில் உள்ளது; வைப்புத்தொகை சுமார் 15 மடங்கு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: பேரிடர் காலங்களில் அரசியல் பாகுபாடு காட்டக்கூடாது: பிரியங்கா