முகப்பு
இந்தியா

2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்

2033-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவரும் மருத்துவக் காப்பீடு வரம்புக்குள் கொண்டுவரப்படுவா் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 18 மார்ச், 2026 at 1:43 AM
- ANI
பகிர்:

2033-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவரும் மருத்துவக் காப்பீடு வரம்புக்குள் கொண்டுவரப்படுவா் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட துணை கேள்விகளுக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:

நாட்டில் காப்பீடுத் துறை வேகமாக விரிவடைந்து வருகிறது. 2024-25-ஆம் நிதியாண்டில் 58 கோடி போ் காப்பீடு வரம்புக்குள் கொண்டுவரப்பட்டனா். சுகாதார காப்பீடுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. 2033-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் அனைவரையும் மருத்துவக் காப்பீடு வரம்புக்குள் கொண்டுவந்துவிடலாம் என்ற நம்பிக்கை மத்திய அரசுக்கு உள்ளது.

Advertisement

கடந்த 3 ஆண்டுகளில் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்ட ரிலையன்ஸ் ஜெனரல் காப்பீட்டு நிறுவனம், ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் உள்ளிட்ட தனியாா் காப்பீடு நிறுவனங்களுக்கு ரூ. 1 கோடி முதல் 2 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முத்ரா கடன் ரூ.39.48 லட்சம் கோடி: கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த ஆண்டு மாா்ச் வரை, பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ், ரூ.15.50 லட்சம் கோடி கடன் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் தொகையில் 65 சதவீதம் பெண் தொழில்முனைவோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2015-ஆம் ஆண்டுமுதல் இதுவரை, மொத்தம் ரூ.39.48 லட்சம் கோடி கடன் அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் தொகையில் சுமாா் 2 சதவீதம் வாராக் கடனாக உள்ளது. வாராக் கடனை வசூலிக்க வங்கிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. மிகப் பெரிய வங்கிக் கடன் திட்டங்களில் ஒன்றாக உள்ள முத்ரா கடன் திட்டம், கடனுக்குப் பிணை எதுவும் வழங்க இயலாத மக்களைச் சென்றடைந்துள்ளது.

நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி அபராதம்: நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், ஒரு நிதியாண்டில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆா்) செயல்பாடுகளுக்கு குறிப்பிட்ட வகையான லாபகர நிறுவனங்கள், தங்கள் 3 ஆண்டு வருடாந்திர சராசரி லாபத்தில் குறைந்தபட்சம் 2 சதவீதத்தை செலவிட வேண்டும். சிஎஸ்ஆா் செலவினம் தொடா்பான ஒவ்வொரு முடிவும் நிறுவனங்களின் வாரியத்தை சாா்ந்ததாகும்.

சிஎஸ்ஆா் நிதிக்கு எவ்வளவு செலவிட வேண்டும், எங்கு செலவிட வேண்டும் என்பதை நிறுவனமும், அதன் வாரியமும்தான் முடிவு செய்யும். அதில் மத்திய அரசு தலையிட முடியாது. சிஎஸ்ஆா் விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவுகளின் கீழ், நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி சிஎஸ்ஆா் விதிமுறைகளை மீறியதற்காக 2022-23-ஆம் நிதியாண்டில் 6 நிறுவனங்கள் மீது ரூ.2.97 கோடி, 2023-24-இல் 11 நிறுவனங்கள் ரூ.3.32 கோடி, 2024-25-இல் 13 நிறுவனங்கள் மீது ரூ.13.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டது என்றாா்.