முதியவரைக் காக்க வைப்பதா.. நின்றுகொண்டே வேலை செய்யுமாறு தண்டனை வழங்கிய நிர்வாகி!
முதியவரைக் காக்க வைத்த ஊழியர்கள், நின்றுகொண்டே வேலை செய்யுமாறு தண்டனை
நொய்டாவில், வீட்டு மனைப் பிரிவு அலுவலகத்துக்கு வந்த முதியவர், சிறு வேலை ஒன்றுக்காக பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டதை அறிந்த அலுவலக நிர்வாகி, ஊழியர்களுக்கு நூதர தண்டனை அளித்துள்ளார்.
நொய்டா அதாரிட்டி வீட்டு மனைத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற முதியவர் ஒருவர், ஒரு சில ஆவணங்களில் திருத்தம் செய்ய அலுவலகத்துக்கு வந்துள்ளார்.
ஆனால், அவரை கவனிக்காமல், ஊழியர்கள் அலைக்கழித்து உள்ளனர். பல மணி நேரம் அலுவலகத்திலேயே காக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது அனைத்தையும் சிசிடிவி வாயிலாக பார்த்துக்கொண்டிருந்த நிர்வாகி, உடனடியாக அந்த முதியவருக்கு பணியை முடித்துக்கொடுக்குமாறு உத்தரவிட்டார்.
ஆனால், எந்த வேலையும் நடக்கவில்லை. நிர்வாகியின் உத்தரவுக்கு பயப்படுபவர்கள் நாங்கள் இல்லை என்பது போலவே ஊழியர்கள் அனைவரும் அவரவர் சொந்த வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகி, நேரடியாக அலுவலகத்துக்கு வந்து ஆய்வு செய்து, முதியவருக்கு உதவாமல் இருந்த ஊழியர்களைக் கண்டித்ததோடு, அவர்கள் அனைவரும் 20 நிமிடங்கள் உட்காராமல் நின்றபடி வேலை செய்யுமாறு பணித்தார்.
இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த அலுவலகத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதாகவும், பலரும், பல மணி நேரம் காத்திருந்தும் வேலை நடக்காமல் திரும்புவது குறித்து புகார் அளிப்பதாகவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.