மொத்த வருமானமே ரூ.3.5 கோடி, ஐஏஎஸ் அதிகாரி வீட்டின் மதிப்போ ரூ.9.6 கோடி!
26 ஆண்டுகளில் பெற்ற மொத்த வருமானமே ரூ.3.5 கோடி என்ற நிலையில், ஐஏஎஸ் அதிகாரி வீட்டின் மதிப்போ ரூ.9.6 கோடியாக உள்ளது பற்றி
பிகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஹன்ஸ் தற்போது அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்துக்குள் வைக்கப்பட்டிருக்கிறார். இவர் தொடர்பான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அமலாக்கத் துறையின் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த 2000 பக்க குற்றப்பத்திரிகை, சஞ்சீவ் மற்றும் அவரது உதவியாளர்கள் மற்றும் பலர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருக்கிறது.
எரிசக்தித் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பல்வேறு ஒப்பந்ததாரர்களும் இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் இது தொடர்பான வழக்கைப் பதிவு செய்த அமலாக்கத் துறை தில்லி, பாட்னா உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது.
அப்போது ஏராளமான முக்கிய ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் ஏராளமானோரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்திபல தகவல்களை திரட்டியிருக்கிறது.
இந்த குற்றப்பத்திரகையில், சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி மோனா மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் பல்வேறு வகைகளில் பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சஞ்சீவ் நண்பர் சுபாஷ் யாதவுக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்துக்கு பல ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருப்பதும், அவர் மூலம் சஞ்சீவ் குடும்பத்தினருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் செலுத்தப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒப்பந்தங்களைப் பெற்றதற்காக கோடிக்கணக்கில் கமிஷன் கொடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு பல இடங்களில் ஏராளமான சொத்துகள் இருப்பதும் இந்த சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களது ஒட்டுமொத்த வருமானமே ரூ.3.5 கோடிதான். ஆனால் இவர்கள் இருப்பது ரூ.9.6 கோடி மதிப்பிலான பங்களாவில் என்பதையும் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியிருக்கிறது.