காங்கிரஸ் 2029-க்குள் அழிந்து விடும்: ஹரியாணா முதல்வர்
பொய்களைப் பரப்பினால் காங்கிரஸ் முற்றிலும் அழிந்து விடும் என்று நயாப் சிங் சைனி விமர்சனம்
காங்கிரஸ் 2029 ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் அழிந்து விடும் என்று ஹரியாணாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்தார்.
ஹரியாணாவில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் நயாப் சிங் சைனி பேசியதாவது, ``காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பொய்களைப் பரப்பினால், 2029 ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக அழிந்துவிடும். காங்கிரஸுக்கு தெளிவான திசை இல்லை; அவர்கள் பொய்களையும் மோசடிகளையும் மட்டுமே கையாண்டு வருகின்றனர்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமரானால், அரசியலமைப்புக்கு ஆபத்து நேரும் என்று காங்கிரஸ் தலைவர்கள் மக்களவைத் தேர்தலின்போது தவறான தகவல்களை பரப்பினர். ஆனால், இப்போது அரசியலமைப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஒருவேளை, அச்சுறுத்தல் ஏற்படுவதாய் இருந்தால், அது காங்கிரஸ் கட்சியால் மட்டுமே.
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை பாஜக அரசு நிறைவேற்றும் என்பதில் சந்தேகமில்லை’’ என்று தெரிவித்தார்.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள்கள் விவாதத்தின் முடிவில், கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 17) மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையானது.
இதனைக் கண்டித்து, அம்பேத்கருக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் பேசிய அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரை பாஜக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.