நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. கிறிஸ்துவ மக்களுக்கு உலகத் தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இந்திய கத்தோலிக்க பேராயர்கள் பேரவை (சிபிசிஐ) நடத்திய விழாவில் திங்கள்கிழமை கலந்து கொண்டார்.
அந்த காணொலியை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் மோடி பதிவிட்டிருப்பதாவது:
”அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையைக் காட்டட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:
“அருட்தந்தை அலெக்சிஸ் பிரேம் குமார், போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் 8 மாதங்களாக தவித்த நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டது மிகுந்த மன நிம்மதியை தந்தது. அவரை பத்திரமாக அழைத்து வர, நமது அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. எங்களைப் பொறுத்தவரை இந்த நடவடிக்கை தூதரக ரீதியிலான ஒரு நடவடிக்கையாகக் கருதவில்லை, நமது குடும்பத்தை சேர்ந்ததொரு உறுப்பினரை மீண்டும் தாயகம் அழைத்து வருவதைப் போன்ற உணர்ச்சிப்பூர்வமான நடவடிக்கையாக அமைந்தது.
இந்தியர்கள் உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும், ஒவ்வொரு குடிமகனையும் காப்பதும் அவர்களை எவ்வித இடையூறுகளை சமாளித்தும் பத்திரமாக அழைத்து வருவது அரசின் கடமை. இதுவே இன்றைய இந்தியாவின் உத்வேகம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.