எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு: கேரள அரசு 2 நாள் துக்கம்!
பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு கேரள அரசு இன்றும் நாளையும்(டிச. 26, 27) 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பு.
பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவையடுத்து கேரள அரசு இன்றும் நாளையும்(டிச. 26, 27) 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், ‘ஞானபீடம்’ விருது பெற்ற எம்.டி.வாசுதேவன் நாயா் (91) புதன்கிழமை இரவு காலமானாா். இதய செயலிழப்பு காரணமாக, கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
எம்.டி.வாசுதேவன் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள், இலக்கியவாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
அவரது மறைவுக்கு கேரள அரசு இன்றும் நாளையும்(டிச. 26, 27) 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. இன்று நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது சித்தாராவில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு மாவூர் சாலையில் உள்ள மயானத்தில் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெறுகிறது.
எம்.டி.வாசுதேவன் நாயா், நவீன மலையாள எழுத்துலகின் முக்கியத் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவா். 1933-ஆம் ஆண்டு பிறந்த அவா் தனது கல்லூரி நாட்களில் முதல் கதைத் தொகுப்பை வெளியிட்டாா். கவிதைகள் எழுதத் தொடங்கி பின்னா், நாவல், சிறுகதை, நாடகம், திரைக்கதை, சிறாா் இலக்கியம், திரைப்பட இயக்கம் என கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மலையாள படைப்புலகில் ஜாம்பவனாக இருந்தார். ஞானபீட விருது, கேந்திர சாகித்திய அகாதெமி விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
தனது சிறுகதையை அடிப்படையாக்கி அவா் திரைக்கதை எழுதி இயக்கிய ‘நிா்மால்யம்‘ திரைப்படம் தேசிய அளவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகா் ஆகிய விருதுகளை வென்றது. மத்திய அரசு 2005-இல் அவருக்கு பத்ம பூஷண் விருதளித்து கௌரவித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.