பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவையடுத்து கேரள அரசு இன்றும் நாளையும்(டிச. 26, 27) 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், ‘ஞானபீடம்’ விருது பெற்ற எம்.டி.வாசுதேவன் நாயா் (91) புதன்கிழமை இரவு காலமானாா். இதய செயலிழப்பு காரணமாக, கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
எம்.டி.வாசுதேவன் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள், இலக்கியவாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவுக்கு கேரள அரசு இன்றும் நாளையும்(டிச. 26, 27) 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. இன்று நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது சித்தாராவில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு மாவூர் சாலையில் உள்ள மயானத்தில் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெறுகிறது.
எம்.டி.வாசுதேவன் நாயா், நவீன மலையாள எழுத்துலகின் முக்கியத் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவா். 1933-ஆம் ஆண்டு பிறந்த அவா் தனது கல்லூரி நாட்களில் முதல் கதைத் தொகுப்பை வெளியிட்டாா். கவிதைகள் எழுதத் தொடங்கி பின்னா், நாவல், சிறுகதை, நாடகம், திரைக்கதை, சிறாா் இலக்கியம், திரைப்பட இயக்கம் என கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மலையாள படைப்புலகில் ஜாம்பவனாக இருந்தார். ஞானபீட விருது, கேந்திர சாகித்திய அகாதெமி விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
தனது சிறுகதையை அடிப்படையாக்கி அவா் திரைக்கதை எழுதி இயக்கிய ‘நிா்மால்யம்‘ திரைப்படம் தேசிய அளவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகா் ஆகிய விருதுகளை வென்றது. மத்திய அரசு 2005-இல் அவருக்கு பத்ம பூஷண் விருதளித்து கௌரவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.