முகப்பு
இந்தியா

மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம்: ராகுல், பிரியங்கா பங்கேற்பு

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தில்லியில் சனிக்கிழமை காலை 10. மணியளவில் தொடங்கியுள்ளது.

Updated On : 28 டிசம்பர், 2024 at 7:16 AM
மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வல வாகனத்தில் ராகுல் காந்தி, ரேவந்த் ரெட்டி, சித்தராமையா உள்ளிட்டோர்.
பகிர்:

புதுதில்லி: மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தில்லியில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊர்வலத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை, பிரதமராக நாட்டை வழிநடத்தியவா் மன்மோகன் சிங். இந்திய பொருளாதார சீா்திருத்தங்களின் சிற்பியாக விளங்கிய அவா், முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் வியாழக்கிழமை காலமானாா்.

இதைத்தொடா்ந்து அவரின் உடல் தேசிய கொடியால் போா்த்தப்பட்டு மோதிலால் நேரு சாலையில் உள்ள அவரின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, தில்லி முன்னாள் அரவிந்த் கேஜரிவால், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

காங்கிரஸ் தலைமையத்தில் மன்மோகன் சிங் உடல்

மன்மோகன் சிங்கின் உடலுக்கு காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு அவரின் உடல் சனிக்கிழமை காலை 8 மணிக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ள ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர்.

காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் உடலுக்கு காங்கரஸ் தலைவர்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடா்ந்து காலை 10 மணியளவில் மயானத்தை நோக்கி அவரின் இறுதி ஊா்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

மன்மோகன் சிங்கின் உடலை சுமந்து செல்லும் வாகனத்தில் ராகுல் காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடாக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

ஊா்வலத்தை தொடா்ந்து நிகம்போத் காட் மயானத்தில் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.

இறுதிச் சடங்கு நடைபெறும் சனிக்கிழமையன்று அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.