முகப்பு
இந்தியா

வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிப்பதில் மத்திய அரசு தாமதம்: கேரள அமைச்சர் குற்றச்சாட்டு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளை தீவிரமான பேரிடராக அறிவிப்பதில் மத்திய அரசு தாமதம் செய்துவிட்டதாக கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Updated On : 1 ஜனவரி 2025, 4:32 am IST
பகிர்:

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளை தீவிரமான பேரிடராக அறிவிப்பதில் மத்திய அரசு தாமதம் செய்துவிட்டதாக கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

"வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் தீவிரமான பேரிடராக அறிவிக்கப்படும்' என்று மத்திய அரசு திங்கள்கிழமை கேரள அரசுக்கு அதிகாரபூர்வமாகத் தெரிவித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

வயநாடு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு மத்திய அரசு ஐந்து மாதங்கள் தாமதித்தது ஏன் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குள் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அது பயனளிக்கக் கூடியதாக இருந்திருக்கும்.

Advertisement

Advertisement

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு மாதத்துக்குள் அமைச்சகங்களுக்கு இடையிலான குழு மத்திய உள்துறைக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்தபோதிலும் அதை தீவிர பேரிடராக அறிவிக்காமல் மத்திய அரசின் உயர்நிலைக் குழு காலம் தாழ்த்தியது.

இப்பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை 2005, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யுமாறும், அவர்களின் மறுவாழ்வுக்காக புதிய கடன்களை வழங்க உதவுமாறும் கேரளம் விடுத்த கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளது. இது மத்திய அரசுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பு முன்கூட்டியே வந்திருந்தால் என்ஜிஓக்கள் உள்ளிட்ட அமைப்புகளின் உதவியுடன் மறுசீரமைப்புப் பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொண்டிருக்க முடியும்.

எனினும், மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து வயநாட்டில் மறுசீரமைப்புப் பணிகளை கேரள அரசு முன்னெடுத்துச் செல்லும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.