மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் அவரது மகன் நகுல்நாத் எம்.பியுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருப்பதால் எந்த நேரத்திலும் தோ்தல் தேதி அறிவிக்கப்படலாம். இதையடுத்து நாடுமுழுவதும் தோ்தல் முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதேசமயம் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸில் இருந்து பல தலைவர்கள் வெளியேறி வருகின்றனர். இது வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
கடந்த பிப்.12-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான அசோக் சவாண் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். இந்த நிலையில் அவரைத்தொடர்ந்து மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தும் தனது மகன் நகுல்நாத் எம்.பியுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காததால் கமல்நாத் அதிருப்தியில் இருப்பதாகவும், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பேரவைத் தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததால் ராகுல் காந்திக்கு எதிராகவும் கமல்நாத் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், ஜபல்பூரில், “நான் நேற்றிரவு 10.30 மணிக்கு கமல்நாத்திடம் பேசினேன். அவர் சிந்த்வாராவில் இருக்கிறார் என்றார்.
இந்த ஊகங்களுக்கு மத்தியில் கமல்நாத் சனிக்கிழமை பிற்பகல் தேசிய தலைநகர் தில்லி சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.