பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை அமல்படுத்திய முதல் யூனியன் பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியுள்ளது.
கைவினைக் கலைஞர்களுக்கு உதவும் நோக்கில் கொண்டு வரப்பட்ட பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தினை அமல்படுத்திய முதல் யூனியன் பிரதேசமானது ஜம்மு-காஷ்மீர்.
இதையும் படிக்க | சிறைச்சாலைகளில் ஜாதியப் பாகுபாடு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 30 பேருக்கு ‘தர்ஸி கலை’ பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சியை ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநரின் ஆலோசகர் ராஜீவ் ராய் பட்நாகர் மற்றும் மத்திய திறன் மேம்பாடுத் துறை செயலர் அதுல் குமார் திவாரி ஆகியோர் புதன்கிழமை நடத்தினர்.
“கைவினைக் கலைஞர்கள் சமூகத்தை சுயதொழில் செய்வதற்கு ஊக்கப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இது உள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்திய முதல் யூனியன் பிரதேசம் என்ற பெருமையை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் பெற்றுள்ளது” என்று பட்நாகர் தெரிவித்தார்.
திறன் மேம்பாட்டின் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதில் நிர்வாகத்தின் வேகத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் மிக விரைவில் ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டமானது கைவினைக் கலைஞர்களுக்கு உதவுவதற்காக 2023 செப்டம்பரில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டமானது ஐந்து முதல் ஏழு நாட்களுக்கான அடிப்படை பயிற்சி, 15 நாட்களுக்கு மேலான பயிற்சி உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.