தனது வயதைக் கருத்தில் கொண்டு வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் பிரதமர் தேவெ கௌடா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் (மக்களவைத்) தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. எனக்கு இப்போது 90 வயது. தேர்தலில் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வேன். எனக்கு பேசும் சக்தியும் ஞாபக சக்தியும் உண்டு.
அதன் மூலம் நான் பிரசாரம் செய்வேன்.
மக்களவைத் தேர்தலில் மஜத தலைவர் எச்.டி.குமாரசாமி போட்டியிடுவது குறித்தும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பிரதமர் மோடி என்ன சொன்னாலும் பின்பற்றப்படும். ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொள்கிறேன் என்றார்.
வரும் மக்களவைத் தேர்தலை பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் கைகோர்த்து மதசார்பற்ற ஜனதா தளம் சந்திக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.